சாத்தப்பனும், குண்டோதரன் பேயும்
சாத்தான் குளம் என்ற ஓர் ஊரில் உழவர் ஒருவர் இருந்தார்.
அவர் கடுமையான உழைப்பாளி என்பதால் நல்ல கடுமையான உடல் கட்டும், பெரிய மீசையுடன் பார்ப்பதற்குப்
பயங்கரமாக இருந்தார். அவரது பெயர் சாத்தப்பன். அவருக்கு என்று ஊரில் இருந்த
கொஞ்ச நிலத்தில் உழுவு செய்து, சம்பாதித்து
வந்தார். ஏழையானாலும் அவர் எல்லோருக்கும் உதவும் குணம் படைத்தவர். ஒரு நாள்
உழுவதற்காக அவர் வைத்திருந்த கலப்பை உடைந்து விட்டது.
புதிய கலப்பை செய்வதற்கு மரம் வெட்டுவதற்காகப்
பக்கத்திலிருந்த காட்டுக்குள் நுழைந்தார் அவர். அங்கிருந்த பெரிய மரம் ஒன்றைத்
தேர்ந்து எடுத்தார். “நல்ல
வைரம் பாய்ந்த மரம். இதில் கலப்பை செய்தால் நீண்ட காலம் உழைக்கும்” என்று சொல்லிக் கொண்டே கோடரியால்
அதை வெட்டத் தொடங்கினார்.
மரத்தை வெட்டும் போது பொழுது போக
அவர் வேடிக்கையாக பாடத் தொடங்கினார்.
“வந்தேண்டா உழுவுக்காரன்
பேயைக் காட்டிலும் வலிமையானவன்
நான் ஆயிரம் பேயை பிடித்தவன்டா
அலாவுதின் பூதத்தை பார்த்தவன்டா
விக்கிரமாதித்தனின் வேதாளம் என் நண்படா
கொள்ளிவாய் பிசாசின் தலையில் தீயை வைத்தவன்டா
இன்றைக்கு நல்ல வேட்டை,
இனிமேல் பேய் பாடு பெறும் பாடு”
இப்படியாக அவர் வாய்க்கு வந்ததை எல்லாம் கர்ணகடுர குரலில்
பாடினார்.
அந்த மரத்தில் நிறைய பேய்கள் குடி இருந்தன. சாத்தப்பன் அந்த
மரத்தை வெட்டுவதையும், அத்துடன்
அவர் பாடிய பாடலையும், அவரது
உருவத்தையும் கண்டு அவை பயந்து நடுங்கின.எல்லாம் பேய்களும் உடனே ஒன்றுடன் ஒன்று
பேசின, மரத்தை
விட்டுக் கீழே இறங்கிய எல்லாப் பேய்களும் அவர் காலில் விழுந்தன.
பேய்களைக் கண்ட
அவருக்கு அச்சத்தால் மூச்சே நின்று விடும் போல இருந்தது. என்ன
நடக்கப் போகிறதோ என்று உள்ளுக்குள் நடுங்கியபடியே இருந்தார். இருந்தாலும் அதை
வெளியே காட்டாமல் இருந்தார்.கிழப்பேய் ஒன்று,
“ஐயா! இந்த மரத்தில் நாங்கள் பரம்பரையாக வாழ்ந்து வருகிறோம்.
எதற்காக இதை வெட்டுகிறீர்கள்? எங்களை
ஏன் பிடிக்க வந்தீர்கள், நாங்க
உங்க ஊர் மக்கள் யாருக்கும் கெடுதல் செய்யவில்லையே, எங்களுக்கு வாழ்வு கொடுங்கள்” என்று கெஞ்சியது.
இதைக் கேட்டதும் அவருக்குப் போன உயிர் திரும்பி வந்தது.
தன் நடுக்கத்தை மறைத்துக் கொண்டார்.பேய்களைப் பார்த்து அதிகாரக் குரலில், “நிலத்தில் எள் விதைக்க வேண்டும்
புதிய கலப்பை செய்வதற்காக இந்த மரத்தை வெட்டுகிறேன். நீங்கள் என் காலில்
விழுந்ததால் பிழைத்தீர்கள். இல்லையேல் உங்களை எல்லாம் ஒழித்து இருப்பேன். என்
வீட்டுத் தோட்டத்தில் பத்துப் பேய்களைக் கட்டி வைத்து இருக்கிறேன், அவை எனக்கு போதாது” என்று கதை அளந்தார் சாத்தப்பன்.
“ஐயா! எங்களை விட்டு விடுங்க, மேலும் இந்த மரத்தை வெட்டாதீர்கள். நாங்கள் வேறு எங்கே
போவோம்? எங்கள்
மீது இரக்கம் காட்டுங்கள்” என்று
எல்லாப் பேய்களும் அவர் காலைப் பிடித்துக் கொண்டு அழுதன.
“கலப்பை இல்லாமல் நான் என்ன செய்வேன்? என்னிடம் இரக்கத்தை
எதிர்பார்க்காதீர்கள். மரத்தை வெட்டியே தீருவேன்”
என்றார் சாத்தப்பன்.
கிழப்பேய் அவனைப் பார்த்து,
“ஐயா! உங்கள் நிலத்தில் ஓராண்டிற்கு எவ்வளவு எள் விளைகிறது?” என்று கேட்டது.“ஐம்பது மூட்டை எள்?” என்றான் அவர்.
“ஆண்டிற்கு நூறு மூட்டை எள் நாங்கள் தருகிறோம். இந்த மரத்தை
வெட்டாதீர்கள்” என்று
கெஞ்சியது அது.உங்கள் மீது இரக்கப்பட்டு இந்த மரத்தை வெட்டாமல் விடுகிறேன்.
ஒவ்வோர் ஆண்டும் அறுவடை நேரத்தில் நூறு மூட்டை எள் வந்தாக வேண்டும். வரத்
தவறினால் இந்த மரத்தை வெட்டுவதோடு நிற்க மாட்டேன். உங்களையும் அழித்து விடுவேன்” என்றார் அவர்.
“எங்கள் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி. நாங்கள்
சொன்ன சொல் தவற மாட்டோம்” என்றது
அந்தப் பேய்.மகிழ்ச்சியுடன் சாத்தப்பன் வீடு வந்து சேர்ந்தார். பேய்களை
சந்தித்ததை யாரிடமும் அவர் சொல்லவில்லை. தன் நிலத்தில் எள்ளுக்குப் பதில் நெல்
விளைவித்தார், கலப்பை
ஒன்றை தச்சரிடம் பணம் கொடுத்து வாங்கிக் கொண்டார்.
இதுவரை சோம்பேறியாக மரத்தில் உறங்கிக்கிடந்த அந்த பேய்கள்
எல்லாம் காட்டில் தரிசாக கிடந்த இடத்தில் கடுமையாக உழைத்தது, அந்த நிலத்தில் எள்ளை
விதைத்தது.அறுவடைக் காலம் வந்தது. பேய்கள் கடுமையாக உழைத்த காரணத்தால் நல்ல
விளைச்சல் கிடைத்தது, நூறு
மூட்டை எள்ளைச் சேர்த்து அவரிடம் கொண்டு வந்தன.பேய்களைப் பார்த்து அவர், “சொன்னபடியே எள் கொண்டு வந்து
இருக்கிறீர்கள். என்னை ஏமாற்ற முயன்றால் நான் பொல்லாதவனாகி விடுவேன். ஆண்டு
தோறும் இப்படியே வர வேண்டும்” என்று
மிரட்டி அவற்றை அனுப்பி வைத்தார்.
நடுங்கியபடியே பேய்கள் அங்கிருந்து சென்றன.அதே நேரம்
சாத்தப்பனின் வயலில் நல்ல விளைச்சல். தன் குடும்பத்திற்கு போக மீதியை
கோயிலுக்கும், ஏழை
மக்களுக்கும் கொடுத்தார். பேய்களால் கிடைத்த 100
எள் மூட்டைகளள விற்று அந்த பணத்தில் புது வீட்டை கட்டத்
தொடங்கினார்.
சில நாட்கள் கழிந்தன. வெகு தொலைவில் இருந்து குண்டோதரன்
என்ற பெயருடைய பேய் தன் உறவினர்களைப் பார்க்க அங்கு வந்தது. எல்லாப் பேய்களும்
இளைத்துத் துரும்பாக இருப்பதைக் கண்டது அது.
“சென்ற ஆண்டு உங்களைப் பார்த்தேன். மகிழ்ச்சியாக
இருந்தீர்கள். இன்றோ மெலிந்து சோகத்துடன் காட்சி அளிக்கிறீர்கள். என்ன நடந்தது? சொல்லுங்கள்” என்று கேட்டது அது.
சாத்தப்பனை பற்றியும்,
அவருக்கு உழைத்து கொடுக்கும் 100
எள் மூட்டைகளைப் பற்றியும், நடந்தது
அனைத்தையும் சொன்னது ஒரு பேய்.“நூறு
மூட்டை எள்ளைத் விளைவித்து கொடுப்பதிலேயெ எங்கள் காலம் கழிகிறது” என்று எல்லாப் பேய்களும்
வருத்தத்துடன் சொல்லின.
குண்டோதரன் பேயால் சிரிப்பை அடக்க முடியவில்லை. “நீங்கள் இவ்வளவு முட்டாள்களா? நாம் பேய்கள் அல்லவா? நமக்குத்தான் மனிதர்கள் பயப்பட
வேண்டும். நாம் அவர்களுக்குப் பயப்படலாமா?” என்று
கேட்டது.“அவர்
சாதாரண மனிதன் அல்ல. எத்தனையோ பெரிய பேய்களை வீட்டில் கட்டி வைத்து இருக்கிறார்.
எதற்கும் அஞ்சாத முரடர். அதனால்தான் நூறு மூட்டை எள் தர ஒப்புக் கொண்டோம்” என்றது ஒரு பேய்.
“போயும் போயும் ஒரு மனிதனுக்கா அஞ்சுகிறீர்கள்? வெட்கம்! வெட்கம்! இன்றே அவனைக்
கொன்றுவிட்டுத் திரும்புகிறேன்” என்று
புறப்பட்டது குண்டோதரன்பேய்.
“வேண்டாம். நாங்கள் சொல்வதைக் கேள். நீ அவரிடம் மாட்டிக்
கொண்டு துன்பப்படப் போகிறாய்” என்று
எச்சரித்தன மற்ற பேய்கள்.
சாத்தப்பனின் வீட்டிற்குச் சென்றது குண்டோதரன். வாய்ப்பை
எதிர்பார்த்து மாட்டுத் தொழுவத்தில் பதுங்கி இருந்தது அது.கையில் இருந்த
பணத்தில் சாத்தபன் வெளியூரில் இருந்து நல்ல கொழு கொழு மாடுகள் வாங்கி வந்து
வீட்டில் கட்டியிருந்தார். அதில் ஒரு மாடு ரொம்பவும் கொழு கொழு என்று
கொழுத்திருந்தது, அதற்கு
ஏற்ப அது முரட்டு மாடாக இருந்தது, அதுவும்
தொழுவத்தில் ஒரு ஓரத்தில் கட்டியிருந்தது, அது
கட்டியிருந்த கயிற்றை அறுத்துக் கொண்டு, அங்கே
இருந்த வைக்கோல் போரில் பின்னார் மறைந்து இருந்தது. அந்த கொழு கொழு முரட்டு
மாட்டை, சாத்தப்பன்
மற்றும் குடும்பத்தார் குண்டோதரன் என்றே அழைப்பார்கள்
அங்க குண்டோதரனுக்கு லாடம் கட்டி, முக்கணாங்கயிறு கட்டினால் கொழுப்பு
அடங்கும், வயலில்
உழவு செய்ய பயன்படுத்தலாம் என்று நினைத்தார். அவர் தொழுவத்திற்கு வந்து
பார்த்தால் கயிறு அறுந்து, குண்டோதரன்
மறைவில் நின்றதை பார்த்து விட்டு, “டேய், பெரிய பையா, உடனே அந்த பழுக்கக் காய்ச்சிய
இரும்புத் துண்டை எடுத்துக் கொண்டு வா, இந்த
குண்டோதரன் என்னையே மிரட்டப் பார்க்கிறான், எல்லோரும்
சொல்லியும் அடம்பிடித்து, என்னையே
எதிர்க்க துணிந்து விட்டான், அவனை
என்ன செய்கிறேன் பார், அந்த
இரும்பு துண்டால் பெரிய சூடு போட வேண்டும். வெளியூர் என்பதால் நம்மைப் பற்றித்
தெரியாமல் ஆட்டம் போடுகிறது. சூடு போட்டவுடன் அதுவும் இங்குள்ளவை போல ஆகிவிடும்.
ஒழுங்காகப் பணிந்து நடக்கும்” என்று
உரத்த குரலில் கத்தினார் சாத்தப்பன்.
பதுங்கி இருந்த குண்டோதரன்பேய் இதை கேட்டு நடுங்கியது. “ஐயோ! எல்லாப் பேய்களும் தடுத்தனவே!
என் ஆணவத்தால் அவற்றை மீறி வந்தேனே! பெரிய மீசையுடன் இருக்கும் இவனைப்
பார்த்தாலே பயமாக இருக்கிறதே. சிறிதும் இரக்கம் இல்லாதவன் போலத் தோன்றுகிறான்.
நாம் நன்றாக மாட்டிக் கொண்டோம். தப்பிக்க வழியே இல்லை. நமக்குப் பெரிய சூடு
போடத்தான் போகிறான். என்ன செய்வது?” என்று
குழம்பியது அது.
பின்னர் எப்படியாவது உயிர் தப்பினால் போதும், அதற்கு ஒரே வழி சாத்தப்பனை மனம்
குளிரச் செய்வது தான் என்று நினைத்து சாத்தப்பனின் கால்களில் விழுந்த
குண்டோதரன்பேய், “ஐயா!
என்னை மன்னித்து விடுங்கள். தெரியாமல் நான் இங்கே வந்து விட்டேன். எனக்குச் சூடு
போட்டு விடாதீர்கள், என்னை
கொன்று விடாதீர்கள்” என்று
கெஞ்சியது.
குண்டான புதுப்பேயைக் கண்டதும் சாத்தப்பனுக்கு பயம் வந்தது, ஆனாலும் அவர் அதை வெளியே காட்டிக்
கொள்ளவில்லை.“என் எதிரில்
வர உனக்கு என்ன துணிச்சல்? அதான்
100 மூட்டை எள் கிடைத்து விட்டது
தானே, அடுத்த
அறுவடைக்கு தானே இங்கே வரவேண்டும், அதற்குள்
ஏன் வந்தாய், உன்னை
என்ன செய்கிறேன் பார்?” என்று
கோபத்துடன் கத்தினார்.
இவரிடமிருந்து எப்படித் தப்பிப்பது என்று சிந்தித்தது அது, “எல்லாப் பேய்களும் என்னை உங்களிடம்
அனுப்பி வைத்தன” என்று
பொய் சொன்னது.“எதற்காக
அனுப்பினார்கள்? உண்மையைச்
சொல். இல்லையேல் உன்னைத் தொலைத்து விடுவேன்”
என்று இடிக்குரலில் முழங்கினார்.
“அய்யா, பேய்கள்
உங்களுக்கு ஆண்டுதோறும் நூறு மூட்டை எள் தருகின்றன. நீங்கள் அவற்றை எண்ணெய்
ஆக்குவதற்காக ஏன் துன்பப்பட வேண்டும்?” எள்ளுக்குப்
பதில் நூறு பீப்பாய் எண்ணெய் தருவதாக அவை முடிவு எடுத்தன.
உங்களுக்கு எள் வேண்டுமா?
எண்ணெய் வேண்டுமா? இதைத்
தெரிந்து வருவதற்காக என்னை அனுப்பி வைத்தன. உங்களுக்கு என்ன வேண்டும்? சொல்லுங்கள்” என்று நடுங்கியபடியே கேட்டது அது.
“இனிமேல் எனக்கு எள் வேண்டாம். எண்ணெயாகவே தாருங்கள்.
ஏதேனும் தவறு நடக்குமானால் உங்கள் அனைவரையும் தொலைத்து விடுவேன். உன்னை நான்
எப்போ எப்போ அழைக்கிறேனோ அப்போ எல்லாம் என் முன்னால் வரவேண்டும், நான் இடும் கட்டளைகளை செய்ய
வேண்டும், அதற்கு
ஒத்துக் கொண்டு, இங்கிருந்து
தப்பி ஓடு.” என்று
விரட்டினார்.
எப்படியோ தப்பித்தோம் என்று ஒரே ஓட்டமாக ஓடியது அது.
மூச்சு வாங்கக் காட்டை அடைந்தது. அதன் நிலையைப் பார்த்த மற்ற பேய்களும் என்ன
நடந்திருக்கும் என்பது புரிந்தது.“என்ன
குண்டோதரா? வீரம்
பேசிவிட்டுச் சென்றாயே? அவரைக்
கொன்று விட்டாயா?” என்று
கேலியாகக் கேட்டது ஒரு பேய்.
“உங்கள் பேச்சைக் கேட்காதது தப்புதான். முரடனான அவனிடம்
நான் நன்றாகச் சிக்கிக் கொண்டேன். எனக்குப் பெரிய சூடு வைத்து இருப்பான். அதை
இப்பொழுது நினைத்தாலும் என் உள்ளம் நடுங்குகிறது”
என் அறிவு வேலை செய்தது. எப்படியோ அவனிடம் இருந்து தப்பி
விட்டேன்? என்றது
புதுப்பேய்.
“அவர் பெரிய ஆளாயிற்றே! அவரிடம் என்ன சொல்லித் தப்பினாய்?” என்று கேட்டது ஒரு கிழப் பேய்.
“நூறு மூட்டை எள்ளாகத் தருவதா? அல்லது நூறு பீப்பாய் எண்ணெயாகத்
தருவதா? என்று
கேட்டு வர நீங்கள் அனுப்பியதாகச் சொன்னேன். அவனும் இனிமேல் நூறு பீப்பாய்
எண்ணெயே தருமாறு கட்டளை இட்டான்” என்று
நடந்ததைச் சொன்னது புதுப்பேய்.
“என்ன காரியம் செய்துவிட்டாய். நூறு மூட்டை எள்ளைக்
கொடுத்துவிட்டு நிம்மதியாக இருந்தோம் இனிமேல் நூறு பீப்பாய் எண்ணெய் தருவதாகச்
சொல்லி விட்டு வந்திருக்கிறாய். அவ்வளவு எண்ணெயைச் சேர்ப்பதற்காக நாங்கள்
தூக்கம் இல்லாமல் துன்பப்பட வேண்டும். நாங்கள் தடுத்தும் நீ கேட்கவில்லையே. இனி
என்ன செய்வது” என்று
வருத்தத்துடன் புலம்பின அங்கிருந்த பேய்கள்.
குண்டோதரனும் மற்ற பேய்களும் தங்கள் தலைவிதியை நொந்து
கொண்டு, விளைச்சல்
மட்டும் செய்யாது, அதன்
பின்னர் கடுமையாக உழைத்து எள்ளை எல்லாம் எண்ணைய் ஆக்கி ஆண்டுதோறும்
சாத்தப்பனுக்கு நூறு பீப்பாய் எண்ணெயைத் தந்து வந்தன.
சாத்தப்பனும் அவற்றை விற்று பணக்காரர் ஆனார், மேலும் அந்த குண்டோதரனை அடிக்கடி
அழைத்து, ஊருக்கு
நல்ல நல்ல காரியங்கள் செய்தார். மழைக்காலம் வருவதற்கு முன்னர் ஊரில் இருக்கும்
ஏரி, குளங்களில்
தூர் வாரி எடுக்கச் செய்தார், நல்ல
பாதைகள் போட வைத்தார். ஊர் முழுவதும் வேப்பமரம்,
ஆலமரம், தேக்கு, கொய்யா, போன்ற மரங்கள் நட்டு தண்ணீர் விடச்
சொன்னார். மருத்துவமனை, நூலகம்
போன்ற கட்டடங்களை பேய்களை வைத்து கட்டவைத்தார். இவ்வாறாக எல்லோரும் பயப்படும்
பேய்களை தன் புத்திசாலித்தனத்தால் அனைவருக்கும் பயன்படும் வகையில் செய்தார்.
ஊராரும் அவரைப் போற்றி வந்தார்கள்.
|
.jpg)
