சிறுவர் கதைகள்

                                         
                                                            நீதி தவறிய மன்னன்

  பாண்டிய நாட்டை ராசராசன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவன் மனைவி ஓரளவிற்கு இசைஞானம் உடையவள்; சிறந்த அழகியும் கூட
தனக்கிருந்த கொஞ்சநஞ்ச இசை ஞானத்தை வைத்துக் கொண்டே மிகுந்த பெருமையடைந்தாள் அரசியார். தன்னை மிஞ்சிய இசை ஞானமுள்ளவர்கள் யாரும் இல்லை என்பது அவள் எண்ணம்.

அரசியைப் புகழ்ந்து அவளது சிறப்பை பாராட்டியே தங்கள் காரியங்களை சாதித்துக் கொண்டது காக்கா கூட்டம் ஒன்று.

வருடா வருடம் கோயிலில் விழா நடைபெறும். அப்பொழுதெல்லாம் பாணபத்திரர் என்ற இசைக்கலைஞர் மிகவும் அழகாக இசை நிகழ்ச்சி நடத்துவார். அவர் இறந்த பின், அவரது மனைவி இறைவனைப் புகழ்ந்து பாடுவாள்.

ராசராசன் பதவிக்கு வந்த பிறகு, அவனது மனைவியான அரசியாரின் இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

பாணபத்திரரின் மனைவி மிகுந்த வேதனை அடைந்தாள். "சரி! நமக்கு விதித்தது இவ்ளோதான்!' என சிலகாலம் ஒதுங்கி இருந்தாள்.

அந்த வருடமும் வழக்கம் போல் திருவிழா வந்தது. இறைவனை எப்படியாவது பாடித் துதிப்பது என்று முடிவு செய்தாள். வழக்கம் போல் அரசியாரின் இசைக் கச்சேரி கோலாகலமாக நடைபெற்றது. மக்கள் இசையை ரசித்துக் கொண்டிருந்தனர்.

திடீரென்று ஜனங்கள் மெல்ல எழுந்து செல்ல ஆரம்பித்தனர். அதைக் கண்டதும் மன்னனுக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன நடக்கிறது என்று பார்க்கச் சொன்னான்.

கோயிலில் ஒரு மூலையில் அமர்ந்து பாணபத்திரரின் மனைவி இறைவனைத் துதித்து பாடிக் கொண்டிருந்தாள். மக்கள் அவளது இசையில் மயங்கி அங்கே சென்றனர். இதைக் கேள்விபட்ட அரசியார் கொதித்துப் போனார்.

“அன்பே! என்னை கேவலப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இவள் இப்படி நடந்துக் கொண்டாள். இவளுக்கு சரியான தண்டனை கொடுங்கள்!'' என்றாள்.

பாணபத்திரரின் குடும்பத்திற்கு தன் தந்தையார் காலத்தில் கொடுக்கப்பட்ட மரியாதையை மன்னன் அறிவான். எனவே, அக்குடும்பத்திற்கு எதிராக செயல்பட பயந்தான். இருப்பினும் தன் மனைவியை திருப்திபடுத்த வேண்டும் என்பதற்காக பாணபத்திரரின் மனைவியை பழிவாங்க நினைத்தான்.

அச்சமயத்தில் ஈழநாட்டு பெண் ஒருத்தி இசைக் கலையில் பெரும்புகழ் பெற்றிருந்தாள். எனவே, அவளை அழைத்து வந்து நாட்டில் இசைக்கச்சேரி வைத்தான். கச்சேரி முடிவில், “என்னுடன் போட்டியிட யார் தயார்?'' என்றாள்.

அப்படி கேட்க வைத்ததும் மன்னர் தான். உடனே மன்னன் பாணபத்திரரின் மனைவியைப் பார்த்து, “அம்மையீர்! நீங்கள் தான் நம் நாட்டின் பெருமையை நிலைநாட்ட முடியும்!'' என்றான்.

“பணம், புகழுக்காக இல்லை. நாட்டின் பெருமைக்காக கலந்து கொள்கிறேன்!'' என்றார்.

உடனே போட்டியின் திட்டங்களை மன்னன் அறிவித்தான்.

“மூன்று நாட்கள் போட்டி நடைபெறும். நடுவர் தீர்ப்பே இறுதியானது. ஈழநங்கை வெற்றி பெற்றால் அரசவைக் கலைஞராக்கப்படுவார். பாணபத்திரரின் மனைவி தோற்றால் நாடு கடத்தப்படுவார்...'' என்றான்.

முதல் நாள் போட்டி துவங்கியது. 

ஈழ மங்கையின் இசை அவ்வளவு சிறப்பாக இல்லை என்றாலும் அரசரின் கட்டளைப்படி அவளே சிறந்த இசை வழங்கியதாக அறிவிக்கப்பட்டது. இரண்டாவது நாளும் தீர்ப்பு இப்படியே வழங்கப்பட்டது.

பாணபத்திரரின் மனைவி, மன்னன் தனக்கெதிராக

போட்டுள்ள சதித்திட்டம் என்பதை புரிந்து கொண்டு இறைவனிடம் கூறி அழுதாள்.

""இறைவா நீ தான் எனக்கு உதவி செய்ய வேண்டும்!'' என்று முறையிட்டாள்.

மூன்றாவது நாள் போட்டி துவங்கியது. திட்டமிட்டபடியே ஈழத்து மங்கை தான் சிறப்பாக இசைத்ததாக தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது மக்கள் கூட்டத்தில் இருந்து முதியவர் ஒருவர் எழுந்து நின்றார்.

“மன்னா! இந்த எளியவன் சில வார்த்தைகள் பேசலாமா?'' என்றார்.

“பேசுங்கள்!'' என்றான் மன்னன்.

“நடுவர்களே... எந்த அடிப்படையில் ஈழமங்கையின் இசைதான் சிறந்தது என்று தீர்ப்பு வழங்கினீர்கள்?'' என்றார்.

திடுக்கிட்டனர் நடுவர்கள். முதியவர் ஈழத்து நங்கையின் இசையையும், பாணபத்திரரின் மனைவி இசைத்த இசை இரண்டிற்கும் உள்ள சிறப்புகளையும், குறைகளையும் புட்டு புட்டு வைத்தார்.

“பாணபத்திரரின் மனைவி இத்தனை சிறப்பாக இசைக்க, அவரை எப்படி தோற்றவர் என்று சொன்னீர்கள்?'' என்றார் முதியவர்.

மன்னரின் முகத்தை பார்த்தனர் நடுவர்கள். “நீங்கள் எல்லாம் என்ன நடுவர்கள். மனசாட்சி படி தீர்ப்பு வழங்காமல் பொய் தீர்ப்பு அளிக்கிறீர்களே...?இது எந்த விதத்தில் நியாயம்?'' என்றார் முதியவர்.

“நடுவர்களே... இசைக்கும், இறைவனுக்கும் சம்மந்தம் உண்டு. இசைக்கு அநீதி செய்வதன் மூலம் இறைவனையே அவமதிக்கிறீர்கள். இசைப்பட வாழ்ந்த பாண்டிய மன்னர்கள் எங்கே? வசைபட வாழ்ந்து முன்னோர் பெயருக்கு அவப்பெயரை கொண்டு வரும் இந்தப் பாண்டியன் எங்கே?'' என்றார் கிழவர்.

கடும் சினம் கொண்ட மன்னன், “என்னையே குற்றம் சாட்டும் அளவிற்கு உங்களுக்கு என்ன துணிச்சல்? பிடித்து இந்தக் கிழவரை கட்டுங்கள்,''என்றான்.

கிழவரைத் தொட்ட காவலர்கள் மின்சாரத்தை தொட்டதுபோல் கீழே விழுந்தனர்.

மறுநிமிடம் கிழவரைக் காணவில்லை. கோயில் கிடுகிடுவென நடுங்கியது. அனைவரும் திடுக்கிட்டனர். கிழவர் இருந்த இடத்தில் இறைவன் காட்சியளித்து மறைந்தார்.

அதிர்ச்சியடைந்த ராசராசன் தரையில் விழுந்தான். தன் தவறை மன்னிக்கும்படி வேண்டினான்.

"நீதி தவறி செயல்பட்ட நான் இனி அரியணையில் அமருவதற்கு

                                               தகுதி இல்லை

இந்தக்கணமே நான் அரச வாழ்வை துறந்து ஆன்மீக வாழ்விற்குச் செல்கிறேன்!'' என்றான்.

தன் மகனிடம் அரச பொறுப்பை ஒப்படைத்துவிட்டு ஆன்மீகத்தில் ஈடுபட்டான் மன்னன்.