சிறுவர் கதைகள்



                                                                                     ஒப்பிடாதே



  ஒரு ஊரில் ஜென் மதத் துறவி இருந்தார். அவரிடம் மாற்றுத் துணி கூட இல்லை. இருந்த உடையும் கிழிசலாக இருந்தாலும் நேர்த்தியாகச் சரி செய்யப்பட்டிருந்தது. அவரை பார்க்கவும், பேசவும், ஆசி பெறவும் பொதுமக்கள் அலை அலையாகத் திரண்டு வந்தனர்.

கூட்டத்தில் மிகப் பெரும்பாலானோர் அந்தத் துறவின் கால்களைத் தங்கள் கைகளினால் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டனர்.

ஜென் துறவியின் புகழ் பரவியது. இது மெல்ல மெல்ல அரண்மனை வரை சென்றது. இந்தத் துறவியைப் பற்றி அந்நாட்டுத் தளபதி கேள்விப்பட்டான். அவனுக்கு எரிச்சலாக இருந்தது. உடனடியாகத் தான் அந்தச் சாமியாரைக் கண்டிக்க வேண்டும் என்று தீர்மானித்தான்.

அவன் கண்டிக்க நினைத்ததற்கு வேறு ஒரு முக்கியக் காரணமும் இருந்தது.

"நான்தான் அந்த நாட்டிலேயே முக்கியமானவன், தனக்கு அப்படிப்பட்ட புகழ் வாய்க்காமல், கேவலம் ஒரு சன்னியாசிக்கு இப்படிப்பட்ட புகழ் கிடைத்துள்ளதே' என்ற பொறாமைதான்.

அவன் அன்றைய தினமே அந்தத் துறவியைக் காண்பதற்குச் சென்றான். "தளபதி வருகிறார்' என்றவுடன் துறவியைச் சுற்றி இருந்த கூட்டம் வழி விட்டு ஒதுங்கி நின்றது.

துறவியை மேலிருந்து கீழ் வரை உற்று நோக்கினான்.

“நான் இந்த நாட்டின் தளபதி. விதம் விதமான ஆயுதப் பயிற்சிகளைப் பெற்ற பல்லாயிரக்கணக்கான போர் வீரர்கள் என்னிடம் உண்டு. நான் அரண்மனைக்குள் நுழைந்தால், தெருவில் நடந்தால், எல்லாரும் என்னைத் தெய்வம் போலக் கருதிக் கை எடுத்து வணங்குவார்கள்.

“இப்போது என்னவென்றால், பார்க்கப் பிச்சைக்காரனைப் போலத் தோற்றமளிக்கக் கூடிய, அடுத்த வேளைச் சாப்பாட்டு கூட இல்லாத உன்னை ஒரு பொருட்டாக மதித்து, அதிக மரியாதை கொடுத்துக் கால்களில் விழுந்து வணங்கிச் செல்கிறார்கள். அதுதான் ஏன், ஏதற்காக என்று எனக்குப் புரியவில்லை,'' என்றான்.

அவனுடைய பேச்சை ரசித்துக் கேட்ட அந்தத் துறவி அவனை அழைத்துக் கொண்டு தன் வீட்டுக்குப் பின்னாலிருந்த ஒரு பூந்தோட்டத்துக்கு வந்தார். அதில் வண்ண வண்ண மலர்கள் மலர்ந்திருந்தன.

அன்றைய தினம் பவுர்ணமியாதலால் முழு நிலவு தன் வெளிச்ச முகத்தைக் காட்டிக் கொண்டிருந்தது.

வானத்தில் ஒளிரும் நிலவைச் சுட்டிக்காட்டி, "அது என்ன?' என்று கேட்டார் துறவி.

“அதுவா,  அது நிலவு!'' என்றான் தளபதி.


பின்னர் துறவி தன் அருகே பூத்திருந்த ஒரு ரோஜா மலரைச் சுட்டிக்காட்டி "இது என்ன?' என்று கேட்டார்.

தளபதி எரிச்சல் அடைந்தான். இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல், “இது ரோஜாப் பூ!'' என்றான்.

“இந்த ரோஜாப்பூ என்றைக் காவது ஒருநாள் அந்த நிலவைப் பார்த்து, "ஆஹா இந்த நிலவு எத்தனை அழகு! இதைச் சுற்றி எவ்வளவு ஒளி வெள்ளம்! நான் அந்த நிலாவைப் போல அவ்வளவு வெண்மையாக இல்லையே என்று ஒப்பிட்டுப் பார்த்ததுண்டா இல்லை அல்லவா? 

அதே போல அந்த நிலவு கீழே உள்ள இந்த ரோஜா மலரைப் பார்த்து, “நாம் இந்த மலைரைப் போன்று நிறத்தில் இல்லையே, மிருதுவாக இல்லையே என்று வருத்தப்பட்டதுண்டா?'' இல்லையே. ரோஜாப் பூவின் அழகு ஒரு விதமானது. நிலவின் அழகு வேறு விதமானது!'' என்றார்.

துறவி சொன்னதைக் கேட்டவுடன் தளபதியின் கண்கள் கலங்கின.

“தங்களை மரியாதைக் குறைவாக நடத்தியதற்கு வருந்துகிறேன் துறவியே! என்னை மன்னிக்க வேண்டும்!'' என்று அவர் கால்களில் விழுந்து வணங்கினான் தளபதி